சனி, 22 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 9




22/09/2012


அஸ்ஸலாமு அலைக்கும்,

இது என் கடைசி வாய்ப்பிற்கு முந்தைய வாய்ப்பு என்பதால் இங்கே தனி தனி தலைப்போடு நானும் எனது நிலையயும் உங்கள் நிலையில் உள்ள அந்த தொடர் தவறினையும் பட்டியலிடுகிறேன்.

குரான் வசனங்களை எப்படி நீங்கள் புரிகிறீர்கள் என்று நான் குற்றம் சுமத்துகிறேனோ அதை ஆமோதிக்கும் வகையில் உங்கள் வாதங்களை மறுக்க வேண்டும் என்று மறுக்கிறேன் என்று நான் சொன்னதை மட்டும் பிடித்து கொண்டு அது தவறாக இருக்கும் காரணத்தினாலே என்று சொன்னதை மீண்டும் வசதியாக மறைக்கிறீர்கள் அல்லது மறந்து விடுகிறீர்கள். 

உங்கள் பதிலில் எந்த புதிய வாதமும் இல்லாததால், இதை படிப்பவர்கள் சிந்தனைக்கு தொகுத்து தருகிறேன்.

ஈஸா நபியை உடலோடு உயர்த்தினானா ?

ஈஸா நபி வருவார் என்ற உங்கள் ஒரு நம்பிக்கையை எளிதாக குரான் மறுக்கிறது.
ஈஸா வே உமக்கு மரணத்தை தருவேன். உன்னை நான் என்னளவில் உயர்த்தி கண்ணியபடுத்துவேன், அதன் மூலம் நிராகரித்தவர் கேவலத்தில் இருந்து உன்னை தூய்மை படுத்துவேன்.
ஈஸா நபியை பற்றிய தர்க்கம் , ஈஸா நபி மீண்டும் வருவதாக இருந்தால் தர்க்கம் தீர்ந்து விட வேண்டும் ஆனால் இவ்விசயத்தில் தீர்ப்பளிப்பவன் அல்லாஹ்வாஹ இருக்கிறான் கியாம நாள் வரையிலும் இருக்கும்.

உயர்த்துதல் என்பதற்கு அகராதி பொருள் ஒன்றை நேரடியாக மேலே உயர்த்துதல் என்று கூறுகிறீர்கள். இதை எந்த நிலையிலும் நான் மறுக்கவும் இல்லை. இதற்கு தொழுகையில் கையை உயர்த்துவது  , வானத்தை உயர்த்துவது குறித்த உதாரணங்கள் தேவையற்றவை.  அது அல்லாமலே அவ்வாறு தான் ஒரு பொருளை குறித்து உயர்த்துதல் என்று வரும் போது செய்ய முடியும் , செய்கிறோம். தூர் மலையை குறித்தும் அதே நிலை தான். 
இதை குறித்து நான் எந்த பதிலையும் சொல்லவில்லை என்று கூறவேண்டுமானால் நான் அவற்றிக்கு வேறு மாதிரியான பொருள் கொடுக்க வேண்டும்.  இதுவரையில் ஒரு பொருளை உயர்த்துவதை  குறித்து மட்டுமே நீங்கள் பேசி கொண்டிருக்கிறீர்கள் . நான் கேட்பது அதுவல்ல.

ஒரு நபரை குறித்து  உயர்த்துவேன் என்று வருமானால், அதன் கருத்திற்கு முக்கியத்துவம் அளித்து பார்க்கும் போது அவை அந்த நபரையே உயர்த்துவது குறித்தும் பேசும், அவற்றின் தகுதியை உயர்த்துவது குறித்தும் பேசும்.

ஒரு இடத்தில் ஈஸா நபியை குறித்து அவரை கைப்பற்றுவேன், என்னளவில் உயர்த்தி , நிராகரித்தோர் கேவலத்திலிருந்து உன்னை தூய்மை படுத்துவேன் என்ற வாசகம் இந்த உயர்த்துதல் என்பது எதனை என்று உறுதி படுத்துகிறது.  
இதை மறுக்க வேண்டும் என்று நீங்கள் தான் கங்கணம் கட்டி கொடு மறுக்கிறீர்கள் போல. மூன்றும் தனி தனி நிகழ்வுகளாக பார்க்க வேண்டும் என்று விளக்கம் தருகிறீர்கள். 

உங்களுக்கு சாதகமாக ஒரு சில வசனங்களில் முந்தைய வசனம் என்ன சொல்கிறது என்பதை பார்த்து அதற்கு தகுந்தார் போல் பொருள் கொள்கிறீர்கள்  3 :55 போன்ற ஒரே வசனத்தில் ஒன்றிற்கு ஒன்று தனித்து பார்க்க வேண்டும் என்றால் என்ன நியாயம் ?

முதலில் உயர்த்தினான் என்பதற்கு தகுதி, அந்தஸ்து, பதவி என்று ஏதேனும் நேரடி பொருள் படும் படியான துணை சொல் இருக்க வேண்டும் என்று சொன்னிர்கள். அதை மறுத்து கருத்து மட்டுமே போதுமானது என்று பதில் சொல்லி நான் தந்த உதாரணங்களிலும் உயர்ந்த இடம், அத்தாட்சிகள் என்று துணை சொல் உண்டு என்று மறுத்து பார்த்தீர்கள்.
ஒரு துணை சொல் தான் வேண்டும் என்று சொன்னால்,
அவரை நான் உயர்த்தி கொண்டேன் என்று இருந்தால் போதுமான இடத்தில்,
அவரை என்னளவில் நான் உயர்த்தி கொண்டேன் என்று இருக்கிறது, நீங்கள் எதிர் பார்க்கும் துணை சொல் என்னளவில் என்பது இங்கும் உள்ளது  என்று மறுக்கும் போதும்,
அது  போலவே 
இத்ரிஸ் நபியை ஒரு உயர்ந்த இடத்தில் உயர்த்தினான்.
நாம் நாடியிருந்தால் அவனை நம் அத்தாட்சிகள் கொண்டு உயர்த்தியிருப்போம்.

இவை இரண்டிலும் அந்தஸ்த்து, பதவி என்று எங்கு உள்ளது. அது அல்லாமல் எப்படி அந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று கேட்டதும் இப்போது கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து பார்க்க வேண்டும் என்று திரும்புகிறீர்கள். இதை தான் ஆரம்பம் முதல் சொல்லி கொண்டு இருக்கிறேன்.

கருத்திற்கு முக்கியத்துவம் என்று ஒன்றை நீங்கள் ஒரு வேளை கொடுத்தால் ,
யூதர்கள் ஈஸா நபிக்கு  முற்படுத்த நினைத்த கேவலம் எது ?
சிலுவையில் அறைந்து கொல்வது.
அவர்கள் அவரை கொல்லவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்  ?
அவர்களால் அந்த கேவலத்தை ஈஸா நபிக்கு தர முடியாமல் அந்த சதி முறியடிக்கப்பட்டிருக்கும்.
அவர்கள் கேவலப்படுத்த முடியாமல் மட்டுமின்றி  அல்லா அவரை தன்னளவில் உயர்த்தியும் கொண்டான். 

இதில் கண்ணியம் என்று பொருள் கொள்ள என்ன தடை உள்ளது ?
ஒருவரை ஒரு சம்பவத்தால் காப்பற்றி அவரை கண்ணியமளித்துள்ள இறைவன் வல்லமை மிக்கவன். ஞானமுள்ளவன் என்று சொல்ல தகுதியற்ற வாசகமா ?

அவர்கள் அவரை கொள்ளவில்லை என்ற வசனமே அவரை அல்லா காப்பற்றி விட்டான் என்று புரிய போதுமானது.
ஈஸா நபியை போன்று ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்  என்பதெலாம் அவரவரின் யூகமே தவிர ஒன்றும் இல்லை. 

கைப்பற்றுதல் என்றால் என்ன ?

கைப்பற்றுதல் என்றால் கட்டுபாட்டில் கொண்டு வருதல் என்றும் தன் வசமாக்கி கொள்ளுதல் என்றும் பொருள் உண்டு ஆனால் அது ஒரு உயிரை அல்லாஹ் கைப்பற்றுதல் குறித்து வருகையில் அந்த வாசகத்திற்கு மரணம் அல்லது தூக்கம் என்ற இரண்டு பொருள் தான் உண்டு என்று முன்னரே விளக்கமளித்து அதற்கு குர்ஆனில் இருந்தே அதன் பொருளை விளக்கவும் செய்திருந்தேன்.
ஒரு உயிரை அதன் மரணத்திலும் அது அல்லாத போது அதன் தூக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.

இது தான் குரான் ஒரு உயிரை கைப்பற்றுவது குறித்து உள்ள நிலைகளை சொல்வதாகிறது. இதையன்றி உடலோடு தூக்கி கொள்ளுதல் என்று முரண் பாடான ஒரு பொருளை கொண்டு திணித்தீர்கள் என்றால்,
3 :55 வசனத்திற்கு உன்னை உடலோடு தூக்கி கொள்வேன். பின்னர் உன்னை என்னளவில் உடலோடு தூக்கி கொள்வேன். 
என்று பொருள் கொள்ள வேண்டி வரும் என்று சொன்னால்,
ஈஸாவை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து பின்னர் அவரை உடலோடு உயர்த்தி கொள்வான் என்று  பொருள் கொள்ள வேண்டும் என்று மறுத்து பார்த்தீர்கள்.

அது போலவே தன்னளவில் என்பதற்கும் தன் கட்டுபாட்டில் என்று பொருள் தருகிறீர்கள்.
உங்கள் வாதப்படி,ஈஸா நபி விசயத்தில் 
ஒரு வசனத்தில் ரபா என்றாலும்  கைப்பற்றுதல் என்றாலும் உடலோடு உயர்த்துவேன். 
வேறு வசனங்களில்   தன்னளவில் என்றாலும் கைப்பற்றுவேன் என்றாலும் கட்டுபாட்டில் என்று பொருள் என்றால் என்ன மாதிரியான விளக்கம் அளிக்கிறீர்கள் என்பதை சிந்திக்கவும்.


ஈஸா நபிக்கு முன்னர் அனைத்து நபி மார்களும் சென்று விட்டனர்.

ஈஸா நபிக்கு முன்னர் அனைத்து நபி மார்களும் சென்று விட்டனர் என்று சொல்லி மரியம் அவர்களை குறித்து சிலாகித்து சொல்லி இருவருமே உணவருந்தி கொண்டிருந்தனர் என்று சொல்கிறான்.
ஈஸா நபி இறப்பை பற்றி தனியாக சொல்ல தேவை இல்லை அது கிருத்துவர்களின் கடவுள் நம்பிக்கையை சிந்திக்க செய்யாது எனவே அனைத்து நபி மார்களை போன்று தான் ஈஸா நபியும் என்று சொல்லி விட்டு. மரியம் அவர்களும்  ஈஸா நபியும் உணவருந்தி கொண்டு தான் இருந்தனர் என்று இறந்த காலத்தில் சொல்கிறான் எனவே உணவருந்துவது தான் கடவுள் தன்மையிலிருந்து மனிதன் என்ற தன்மையை ஒருவரிடம் வேறுபடுத்தும் என்று புரிய முடிகிறது என்று சொல்கிறேன்.

ஏன் உணவருந்துவதை குறித்து சொல்ல வேண்டும் ? அதுவும் தானே அவர்கள் நம்பிக்கையை ஒன்றும் செய்யாது என்று சொன்னால் அதை நீங்கள் என்னிடம் கேட்பதை விடவும் அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் அதை அல்லா தான் ஒரு பெரிய சிந்தனைக்கு உரிய விசயமாக சொல்லி காட்டுகிறான். 

என் நிலையில் ஈஸா நபி உயிர்தெழுந்தார் என்று நம்புகின்ற அவர்கள் அவர் உயிர்தெழுந்தும் உணவு உட்கொண்டார் என்பதை நம்பி கொண்டிருந்தனர். எனவே அவர் ஆவியானவர் இல்லை என்பதை சிந்திக்க சொல்கிறது இந்த வசனம் என்று சொன்னால்,
அதை விமர்சனம் மட்டும் செய்யும் நீங்கள் உங்கள் நிலையில் இதற்கு என்ன பதில் என்று கேட்டிருந்தும் இன்னும் அதற்கான பதிலை தரவில்லை.



ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சியா ?

இது மறுமை நாளின் அத்தாட்சிகளை உடையது. இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். என்னையே பின்பற்றுங்கள்.
இந்த வசனத்தில் அல்லாஹ்வே நேரடியாக பேசும் போது அதற்கு பொருள் இருக்கும் பட்சத்தில் நபியே நீர் கூறும் என்று தேவை இன்றி சேர்க்க தேவை இல்லை என்பதால் இதை அல்லாஹ்வே தன்னை  பினபற்றுங்கள் என்று சொல்வதாக மொழி பெயர்த்தேன்.

இதையும்  நான் எதிர் பார்த்தபடியே தான் புறிந்து மறுத்துள்ளீர்கள்.
நபியை தான் பின்பற்ற முடியும் அல்லாஹ்வை பின்பற்ற முடியாது என்று சொல்கிறீர்கள். இது ஒரு காரணமா ? நபியை பின்பற்றுங்கள் என்று சொன்னாலும் அதன் பொருள் நபி சொல்லும் வழியை பின்பற்றுங்கள் என்பது தான். 
அல்லாஹ்வை பின்பற்றுங்கள் என்றாலும் அல்லாஹ் சொல்லும் வழியை பினப்ற்றுங்கள் என்று சொன்னாலும் ஒன்று தான். அல்லா சொல்லும் வழி என்று வைத்தாலும் நபி சொல்லும் வழி என்று வைத்தாலும் அது குரான் தான் தவிர ஈஸா நபியின் வருகையை அல்ல. 

ஈஸா நபியை குறித்து  பேசிவிட்டு இடையில்  மலக்குமார்களை தான் நாடியிருந்தால் வழி தோன்றல்கலாக்கியிருப்பான் என்றும் எச்சரிக்கிறான்.
எதற்க்கான எச்சரிக்கை இது ?
ஈஸா நபி மறுமை நாளின் அத்தாட்சி என்று நம்ப வேண்டும் என்பதர்க்கா ?
குரான் மறுமை நாளின் அடையாளங்களை கொண்டது அதை சந்தேகப்பட வேண்டாம் என்பதற்கா ?

குர் ஆனில் கியாமத் நாளை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை, எதிரிகளுக்கும் சந்தேகமில்லை.
அதில் சொல்லப்பட்டபடி கியாமத் நாள் வருமா என்பது தான் சந்தேகம். ஆக, இதிலும் உங்கள் விளக்கம் தவறு.

உங்கள் இந்த விளக்கம் தான் அடிப்படை தவறு.
2 :2 இது   திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம், இது நேர்வழி காட்டியாகும். 

குர்ஆனில் கியாமத்தை குறித்து சொல்லபடுகிறது. எனவே இந்த குர்ஆனில் சந்தேகம் கொள்ளாதீர்கள். அதுவே என் வழி , என் வழியை பின்பற்றுங்கள் என்ற எச்சரிக்கை தான் சரியானதாக இருக்கும் பொருந்தியும் போகும்.
நீங்கள் சொல்வது போல ஈஸா நபி கியாமத்தின் அடையாளமாவார், இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம், எனவே  என்னை பின்பற்று  என்று வரும் நடையே முதலில் தவறு.

உங்கள் நிலையில் இருந்து சிந்தித்தாலும் ஈஸா நபியை மறுத்த கூட்டத்தார்க்கு மறுமையில்  கேடு என்று வருகிறது. ஈஸா நபியை மறுத்தார்கள் என்றால் அவரை எதற்க்காக மறுத்தார்கள் என்று சொல்லபடுகிறதே, அது என்ன ? அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னதை மறுத்தார்கள், அவனது  இன்ஜீலை மறுத்தார்கள் . எனவே அது போலவே குரானை மறுத்து விட கூடாது என்ற கருத்தோடு  தான் இங்கு சொல்லபடுகிறது. குரானை குறித்து தான் இங்கு பேசப்பட்டுள்ளது தவிர ஈஸா நபி குறித்து அல்ல.

ஈஸா நபி வருவார் என்பதை  நம்பு இதில் சந்தேகம் வேண்டாம், என்னை பின்பற்று என்று சொல்வதில் எந்த பயனும் இல்லை.
ஒருவர் தன்னை பின்பற்று என்று சொன்னால் அவரது உயர்ந்த ஆதாரம் கொண்டு தான் அதை சொல்வார்களே தவிர வேறு ஒரு நபரை குறித்து அல்ல.

முஹம்மது நபி நல்லவர். இதில் சந்தேகம் வேண்டாம் எனவே என்னை பின்பற்று என்றால் என்ன நினைப்போம் ?
முஹம்மது நபி நல்லவர் இதில் சந்தேகம் வேண்டாம். என்பது மட்டும் போதுமானது.

நான் சொல்லும் வேதம் உண்மை. இதில் சந்தேகம் கொள்ளாதே, என்னை பின்பற்று என்பது தான் பொருந்தும் வாசகம்.

கப்லா மௌதீஹி 

என்ற தொடரில் பன்மை இல்லை ஒருமை தான் உள்ளது எனவே அவரின் மரணத்திற்கு முன்னர் என்று தான் வரும் என்று சொல்கிறீர்கள்.
இது முன்னரே சொலப்பட்டது தான்.
வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் என்று வருகையில் அவரது மரணத்திற்கு முன்னர் , தனது மரணத்திற்கு முன்னர் என்று மொழி பெயர்க்க முடியும். நீங்கள் சொல்வது போல் இதில் எந்த இலக்கண பிழையும் இல்லை. இது தவறான ஒரு வாதம்.

அது போல,
அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்பது 
அதனை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியும்  என்பதை மறுக்க 
அதனை என்று வைத்து கொண்டாலும், இந்த அதனை என்பது ஈஸா நபி உடலோடு  தூக்கப்பட்டார் என்று தான் வைத்து கொள்ள முடியும் என்று சொல்கிறீர்கள்.
ஒரு வசனத்திற்கு  அதன் கருத்தை தான் பார்க்க முடியும் கருத்து சிதைவோ  அர்த்தமற்றதாக அந்த வசனம் ஆகுமா என்பதை தான் பார்க்க வேண்டும். அதை விடுத்து முன்னர் உள்ளவைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

உங்கள் கூற்றுபடியே  சொல்ல வேண்டும் என்றால் கூட,
உடலோடு உயர்த்தினான் என்பதை விடவும் அதனை என்பதற்கு ஈஸா நபி யின் மரணத்தை நம்புவார்கள் என்று தான் பொருள் கொள்ள வசதியாக இருக்கும்.

வேதக்காரர்கள் ஒவ்வொருவரும் ஈஸா நபியின் மரணத்திற்கு முன்னரே அதனை (அவரது மரணத்தை) நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

அதனை என்பது அதை ஒட்டிய வார்த்தையில் இருந்தே எடுக்க பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் ஒசாமா மரணிப்பதற்கு முன் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளமால் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால்,
இங்கே அதனை என்பது ஒசாமாவின் மரணத்தை என்று தான் முதல் பொருள் தர முடியும்.

அதனால் ஒசாமா மரணிக்கவே இல்லை என்று எடுத்து கொள்ள முடியாது. அவர் மரணித்தார் என்றாலும் அவரின் இயற்க்கை மரணத்திற்கு முன்னர் அமெரிக்க படை தான் அவர்களை கொன்றது என்று நம்பினார்கள், நம்புகிறார்கள், நம்புவார்கள். 
நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்பது மூன்று காலங்களையும் குறிக்க கூடிய ஒரு வாசகம் என்பதையும் மறந்து விட கூடாது.

நபியை குறை கூறும் போது  முஸ்லிம்கள் ஆத்திரப்படாமல் இருக்க மாட்டார்கள் ,
சூரியன் கிழக்கே உதிக்காமல் இருக்காது.  போன்றவைகள் உதாரணம்.

எனினும் உங்கள் வாதம் தவறேன்பதர்க்காக  சுட்டி காட்டப்பட்டது தான் இவை. 

வேதக்காரகள் ஒவ்வொருவரும் தனது மரணத்திற்கு முன்னாள் அதனை (சிலுவை மரணத்தை ) நம்பாமல் இருக்க மாட்டார்கள் அவர்களுக்கு ஈஸா மறுமையில் எதிர் சாட்சியாக இருப்பார்.
எதிர் சாட்சி என்று இல்லை சாட்சி என்று தான் உள்ளது என்பதற்காக அனைத்தையும் சாதகமான சாட்சி என்று முடிவு செய்ய முடியாது. 
எப்படி பட்ட சாட்சி என்பது கருத்தில் இருந்து தான் எடுத்து கொள்ள முடியும்.

ஹதிஸ்களை  பொறுத்த மட்டில் அவை குறித்த விமர்சனத்தை தான் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லியே  எடுத்து வைத்தேன். 
நீங்கள் கூறிய அந்த 5 ஹதிஷ்களை  தான் நீங்கள் ஏற்று கொள்கிறீர்கள் மற்ற ஹதிஷ்களை ஈஸா நபி விசயத்தில் ஏற்று கொள்ளவில்லை என்றால் அல் ஜுஹ்ரி குறித்த விமர்சனத்தை விட்டு விடுங்கள். இல்லை அந்த விமர்சனத்திற்கும் உங்கள் பதிலை தாருங்கள். பதில் இல்லை என்றால் அது தவறான ஹதிஷ் என்றே  நீங்கள் கருதுகிறீர்கள் என்று தான் எடுத்து கொள்ள முடியும். 
அதை விடுத்து நீங்கள் சொன்ன ஹதிஷில் என்ன குறை என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு பதில் இது தான். நீங்கள் சொன்னவைகளிலும் சரி மற்றவைகளிலும் சரி அது குரானிர்க்கு முரணான கருத்துடையது. அவ்வளவு தான்.

கடைசி வாய்ப்பில் மிக சிறிய தொகுப்போடு முடிப்பதே படிபவர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்பதால் எனது கடைசி வாய்ப்பில் இதனை முடிக்கிறேன்.

வசலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக